மியான்மர் தாக்குதலில் பங்கேற்ற கமாண்டோக்கள் படங்களை வெளியிடவில்லை: பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி: மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கமாண்டோக்களின் புகைப்படங்கள் எதனையும் வெளியிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி 4 தீவிரவாதிகளின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய தாக்குதலில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களை நடத்தி வரும் தீவிரவாதிகளை அழிப்பதற்காக மியான்மருக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் புகைப்படங்களுடன் வெளியாகி இருந்தன.
ஆனால் தங்கள் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடித் தாக்குதல் நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் வெளியானதில் சர்ச்சையும் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியமான தாக்குதல்களை நடத்திய ராணுவ கமாண்டோக்களின் படங்களை எப்படி ஊடகங்கள் வெளியிடலாம் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ராணுவ கமாண்டோக்கள் மற்றும் மியான்மர் ராணுவ நடவடிக்கை தொடர்பான படங்களை வெளியிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிதன்ஷூ கர், வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா-மியான்மர் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான எந்த புகைப்படத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை" என மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications