தீ விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு, மத்திய அரசு ரூ.2 லட்சம், கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு
டெல்லி: கேரள கோவில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சமும், கேரள அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புட்டிங்கல் தேவி கோவில் வானவேடிக்கையின் போது எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரள மாநில அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications