பயங்கரவாதத்துக்காக 15 ஆண்டுகளில் ரூ11,800 கோடி செலவிட்ட பாக்... 'ஷாக்' தகவல்
டெல்லி: பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 15 ஆண்டுகளில் ரூ11,800 கோடியை பாகிஸ்தான் செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை நேற்று ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பெயரை குறிப்பிடாமல் பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதாக பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிலவரங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை இண்டியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
671 ஊடுருவல்கள்
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 19-ந் தேதியன்று கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 671 ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளதாகவும் 738 தீவிரவாத தாக்குதல்கல் நடத்தப்பட்டன; 2013-ம் ஆண்டு முதல் 2016 ஜூலை வரையிலான காலத்தில் மொத்தம் 141 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; 64 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23.061 தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் மட்டும் கடந்த 7-ந் தேதி வரை 28 ஆண்டுகளில் 23,061 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; 1431 பொதுமக்களும் 6,200 ராணுவ வீர்ர்களும் உயிரிழந்துள்ளனர் என்று தெற்காசியாவின் பயங்கரவாதம் தொடர்பான இணையதள புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 2013-ல் 277; 2014-ல் 224; 2015-ல் 121 ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நடப்பாண்டில் மே மாதம் வரை 51 ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
தீவிரவாத தாக்குதல்கள்...
அதேபோல் ஜம்மு காஷ்மீரில் கடந்த 2013-ல் 170; 2014-ல் 22; 2015-ல் 208 தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டு ஜூலை 10-ந் தேதி வரை மொத்தம் 138 தாக்குதல்களை தீவிரவாதிகல் நடத்தியுள்ளனர்.
25 ஆண்டுகளில்...
ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக கடந்த 12-ந் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 25 ஆண்டுகளில் 34,000 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 12,000 துப்பாக்கிகள், 63,000 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக கூறினார். மேலும் 25 ஆண்டுகளில் 5,000 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார் மோடி.
பாக். பதில் தரனும்..
அந்த கூட்டத்தில், பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகளுக்கு சர்வதேசத்தின் முன் அந்நாடு பதில் தர வேண்டும். சொந்த நாட்டு குடிமக்களுக்கு எதிரான போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என சாடியிருந்தார்.
ரூ11,800 கோடி
பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில், கடந்த 15 ஆண்டுகளில் அந்த நாடு பயங்கரவாதம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நேரடியாக, மறைமுகமாக ரூ11,800 கோடி செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டு அறிக்கையில்தான் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.