ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கேட்டா வறட்சி நிவாரண குழுவை அனுப்புகிறதாம் மத்திய அரசு!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்றும், இதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை தொடங்கி நெல்லை வரை இரவு பகலாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திங்கட்கிழமை முதல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் அளித்த மனுவில் விவசாயிகள் தற்கொலை, வறட்சி நிவாரணம் குறித்து குறிப்பிட்டிருந்தார். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு விளக்கம் அளித்துள்ள மோடி, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை மத்திய அரசு பாராட்டுகிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளதாக கூறினார். மேலும் வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வருவதாகவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை பாராட்டியதாக கூறிய மோடி, ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது பற்றியோ, அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவது பற்றியோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் மோடியுடனான ஓபிஎஸ் சந்திப்பு வெண்டைக்காயில் விளக்கெண்ணை ஊற்றி வதக்கியது போல வழா வழா கொழ கொழா என முடிந்து விட்டதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications