மீண்டும் பிரதமராக 50% வாய்ப்புதான் இருக்கு.. மோடியை கலங்க வைக்கும் ஆய்வாளர் கூற்று!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு 50 சதவிகிதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது.
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு 50 சதவிகிதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று பிரபல பொருளாதார ஆய்வாளரும், மார்கன் ஸ்டான்லி இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைமை திட்ட ஆணையராகவும் இருக்கும் ருச்சிர் சர்மா தெரிவித்துள்ளார்.
ருச்சிர் சர்மா இந்தியா முழுக்க 26க்கும் அதிகமான தேர்தல்களை துல்லியமாக கணித்துள்ளார். பல்வேறு பொருளாதார நிலை, மக்களின் மனோநிலையை வைத்து ஒரு தேர்தலில் எந்த கட்சி முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கும் வல்லமை கொண்டவர்.
கடந்த உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றியை சரியாக கணித்தார். இந்த நிலையில்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கலாம் என்று விளக்கமாக கூறியுள்ளார்.
சென்ற முறை என்ன நடந்தது
அவர், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு பக்கம் இருந்தது, மாநில கட்சிகள் ஒரு பக்கம் இருந்தது, காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலை நிலவியது. இதனால் பாஜக எளிதாக வென்றது. சென்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவே பல மாநிலங்களில் தொடர்ந்து வந்தது. உத்தர பிரதேச தேர்தல் வரை இதுவே அரசியல் சூழ்நிலையாக நீடித்தது. அப்போது பிரதமர் மோடிக்கு மீண்டும் பிரதமராக 99 சதவிகித வாய்ப்பு இருந்தது.
காரணம் என்ன
இதற்கு பல காரணம் இருந்தது. பொதுவாகவே தொடர்ந்து 10 வருடம் ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது, அதற்கு அடுத்த தேர்தலில் வேறு கட்சி ஆட்சியை பிடிக்கும். இதுவும் பாஜகவிற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதவியது. அதேபோல் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனியாகவும், மற்ற எதிர்க்கட்சிகள் தனியாகவும் நின்றது. இதனால் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரித்து பாஜக வென்றது.
எதிர்க்கட்சிகள்
ஆனால் இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்து வருகிறது. பாஜகவிற்கு இது பின்னடைவை ஏற்படுத்தும். உத்தர பிரதேச தேர்தலுக்கு பின் நிலைமை மாறியுள்ளது. மாநில கட்சிகளுடன் சேர காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், பாஜகவிற்கு எதிரான வாக்குகள் எல்லாம் ஒரே இடத்திற்கு செல்லும், இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்றுள்ளார்.
இந்த முறை குறைந்துள்ளது
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு 50 சதவிகிதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. முன்பு 99 சதவிகிதமாக இருந்த வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த காரணத்தால் இந்த மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதனால் இந்த தேர்தல் மிகவும் கணிக்க முடியாத ஒன்றாக மாற உள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு மாநிலம்
மேலும் இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்றுள்ளார். அதாவது, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால், கண்டிப்பாக பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது. இந்த மூன்று கட்சிகள் ஒன்று சேர்வதை வைத்தே தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படும் என்று ருச்சிர் சர்மா தெரிவித்துள்ளார்.