தமிழகத்தில் மோடி செய்வதை ஆந்திராவிலும் செய்ய பார்க்கிறார்.. ரஜினியை தாக்குகிறாரா சந்திரபாபு நாயுடு?
ஹைதராபாத்: தமிழகத்தில் மோடி செய்வதை ஆந்திராவிலும் செய்ய பார்க்கிறார் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து வெளியேறியது.
கூட்டணியை முறித்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அந்த திட்டத்தில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
இடைத் தேர்தல் தோல்விகள்
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களி்ல நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், தனது கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் பாணி
அப்போது, தமிழகத்தில் மோடி செய்ததை ஆந்திராவில் செய்ய முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவுக்கு உரிமைகளை தராமல், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரை நமக்கு எதிராக மாற்றியுள்ளது பாஜக.
நாடு முழுக்க எதிர்ப்பு
நாடு முழுக்க மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் மக்கள் எண்ணம் உள்ளது. உத்ததர பிரதேசம் மற்றும் பீகார் தேர்தல் முடிவுகள் இதற்கு ஒரு உதாரணம். இவ்வாறு அவர் பேசியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஜினி பற்றி விமர்சனம்?
பவன் கல்யாண் போன்ற நடிகர்களை கொண்டு தெலுங்கு தேசத்திற்கு பாஜக நெருக்கடி தருவதாக சந்திரபாபு நாயுடு சுட்டிக் காட்டிய அதே நேரம், தமிழகத்தில் மோடி இதைத்தான் செய்ததாக கூறியுள்ளார். இதன் மூலம், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தந்ததன் பின்னணியில் மோடி இருப்பதாக சந்திரபாபு நாயுடு மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.