காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தைச் சீரமைக்க எனக்கு 60 மாதங்கள் வேண்டும்!- மோடி
ஜம்மு: காங்கிரசால் சீரழிக்கப்பட்டுள்ள இந்த தேசத்தை சீரமைக்க எனக்கு 60 மாதங்கள் வேண்டும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிராநகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை எனக்கு தாருங்கள்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை அழித்துவிட்டன. காங்கிரசால் ஏற்பட்ட அழிவிலிருந்தும், சேதத்திலிருந்தும் நாட்டை மீட்டுக்கொண்டு வர என்னால் முடியும். எனக்கு வாய்ப்புத் தாருங்கள். இது பதவியில் அமர்வதற்கான நேரம் மட்டும் அல்ல நாட்டிற்கான பாதுகாவலராக மாற வேண்டிய நேரமாக நான் கருதுகிறேன்.
இந்த நாட்டிற்கு நல்ல பாதுகாவலர் தேவை. எனவே 60 மாதங்களை எனக்கு தாருங்கள். 60 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இப்போது 60 மாதங்களுக்கு இந்த நாட்டிற்கு சேவை செய்யும் சேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஆட்சியாளன் வேண்டுமா? சேவகன் வேண்டுமா? ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்.
காஷ்மீர் மக்களிடம் வாஜ்பாய் நம்பிக்கையை ஏற்படுத்தினார். வாஜ்பாய்க்கு இன்னும் 5 ஆண்டுகளை அளித்திருந்தால் காஷ்மீரின் முகம் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் முடிக்காத பணிகளை நாம் நிறைவேற்றுவோம். காஷ்மீரில் மனிதநேய கொடியை பறக்க விடுவோம்.
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரி. நாம் இந்த நாட்டை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
மாற்றத்திற்கான அலைகள் காஷ்மீரில் வீசுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றியாளர்களாக டெல்லிக்கு அனுப்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications