அரைத்த மாவையே அரைக்கும் நாட்டின் பிரதமர் வேட்பாளர்கள்!
டெல்லி: நாட்டையே ஆளும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் போகிற இடமெல்லாம் அரைத்த மாவையே அரைத்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நரேந்திர மோடி. காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் துணைத் தலைவர் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்.
தற்போது டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் மோடியும் ராகுலும்தான் முதன்மை பிரசாரகர்கள்.

மோடியின் வளர்ச்சி பேச்சு
மோடியைப் பொறுத்தவரையில் தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகிறார். குஜராத்தின் வளர்ச்சி அல்லது பாஜக ஆளும்ன் மாநிலங்களின் வளர்ச்சி பற்றி பேசுகிறார். தாங்கள் பேசும் வளர்ச்சிக்கு பதிலே சொல்லுவதில்லை என்றும் மோடி சாடுவார். மோடியின் அனைத்து கூட்டங்களிலும் இதுவே பிரதானம்.

சோனியா குடும்பம்
மோடியின் கூட்டங்களில் 2வது விஷயம் கட்டாயம் இருக்கும். அது சோனியா குடும்பத்தை தாக்கி பேசுவதுதான். ஒவ்வொரு கூட்டத்திலும் சோனியா குடும்பத்தையும் காங்கிரசாரையும் சீண்டும் வகையில் ஏதேனும் ஒன்றை பேசுவது மோடியின் பாணி.

இளவரசர் ராகுல்
அனைத்து கூட்டங்களிலுமே ராகுல் பெயரை மோடி உச்சரிப்பே இல்லை. நக்கலாக இளவரசர் என்றுதான் கிண்டலடிப்பார்.

சீண்டிய வார்த்தைகள்
அத்துடன் ராகுல் உங்க மாமா வீட்டில் இருந்தா பணம் வந்தது? ராகுல் உங்க தாத்தா, பாட்டி, அப்பா எல்லாம் நாட்டை சீரழிச்சுட்டாங்க.. சோனியாஜி உடம்பு சரியில்லைன்னா பொறுப்பை இளவரசர்கிட்ட ஒப்படைச்சிடுங்க.. இதுதான் மோடி பாணி.

ஊழல் காங்கிரஸ்
மோடியின் அனைத்து பேச்சுகளிலும் தவறாமல் இடம்பெறுவது காங்கிரஸின் ஊழல்தான். உலக ஊழல் சாம்பியன் காங்கிரஸ், வெளிநாட்டில் ஊழல் பணம் முதலீடு போன்றவை மோடியின் பேச்சுகளில் தொடர்கிறது.

ராகுல் என்ன பேசுகிறார்?
மோடிதான் இப்படி ஒரே மாவை அரைக்கிறார் எனில் அதற்கு நான் சளைத்தவரா ராகுல்.

ரோடு போட்டா சோறு
பாஜகவினர் வளர்ச்சி என்ற பெயரில் ரோடு போட்டார்கள்.. நாங்கள் மக்களுக்கு சோறு போட்டோம்.. அதான் உணவு பாதுகாப்பு மசோதாவை பற்றி பேசுவது..

விமான நிலையங்கள் உருவாக்கம்
விமான நிலையங்களை உருவாக்கியதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்.. நாங்கள் ஏழைகளும் விமானத்தில் பயணிக்க வகை செய்வோம்

நில மசோதா
ஏழை நிலத்தை குறைந்த விலை கொடுப்பதை அபகரிப்பதை தடுக்க நில மசோதா கொண்டு வந்தோம்..

உருக்கத்தை உருவாக்க..
மக்களை உருக வைக்க அப்பாவை கொன்னாங்க, பாட்டியை கொன்னங்க கதையை சொல்லி அழவைப்பது இதெல்லாம் ராகுலின் ரெகுலர் பேச்சுகள்..

கொஞ்சம் கோபம் வந்தா திருட்டு பசங்க..
ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டோ, கோபப்பட்டோ பேசினா, திருட்டுப் பயலுக, மாநிலத்தையே கொள்ளையடிச்சுட்டானுக என்று ஆவேசம் வரும்.
பிரதமர் வேட்பாளர்களே! 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கும் முன்பே அலுத்துப் போய்விட்டதே உங்கள் பேச்சுகள்..












Click it and Unblock the Notifications