மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பையே 2 மாதங்கள் கழித்து அறிந்த வடகிழக்கு மாநில மக்கள்!
பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பையே 2 மாதங்கள் கழித்துதான் வடகிழக்கு மாநில மக்கள் அறிந்து கொண்ட அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பையே 2 மாதங்கள் கழித்துதான் வடகிழக்கு மாநில மக்கள் அறிந்து கொண்ட அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி பொருளாதார நடவடிக்கைகளை சீர்படுத்துவதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தார். அந்த நாள் நள்ளிரவில் இருந்து 15 லட்சம் கோடி ரூபாய் பணம் செல்லாதவை ஆகிப்போனது.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரவே இந்த முயற்சி என்று சொல்லப்பட்டது மக்களுக்கு இதனால் பெருத்த சிரமம் ஏற்பட்டது. சிறுகுறு நடுத்தர தொழில்கள் முடங்கிப் போயின. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிலை எப்படி உணரப்பட்டது தெரியுமா?

ஏழை விவசாயிகளின் கண்ணீர்
மணிப்பூர் மாநில விவசாயிகளுக்கு அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதே தெரியாது. மற்ற மாநிலங்களைப் போல வங்கி சேவைகள் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் விவசாயிகள் தாங்கள் உழைத்து சேர்க்கும் சொற்ப பணத்தை வீட்டில் தான் வைத்து இருப்பார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுசிறுகச் சேர்த்த பணம், தங்கள் வாழ்வை மாற்றும் என்று நினைத்த பணம், குழந்தைகளின் கல்விக்கான சேமிப்பு எல்லாம் அரசின் இந்த நடவடிக்கையால் வெற்றுக் காகிதம் ஆன அந்த ஒரு நொடி அவர்களின் ஆயுசுக்குமான வலியை ஏற்படுத்தி இருக்கும்.

புதிய நோட்டுகள் வெளியீடு
அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிட்டது கூட பல மாதங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இந்த நோட்டுகளை காட்டியபோது அதை எந்த விவசாயியும் நம்பவில்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டு உள்ளார். சாலை, வங்கி, தொலைத்தொடர்பு, கட்டுமானம் என எந்த ஒரு வசதியும் வராத ஊருக்குள் கருப்புப் பணம் மட்டும் வந்திருக்க முடியுமா ? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகாலாந்து எல்லை கிராம மக்கள்
மணிப்பூரில் இப்படி என்றால் நாகாலாந்து மக்களின் சோகம் அதற்கும் மேல் இருக்கிறது. 500, 1000 ரூபாய் எல்லாம் அவர்களின் அதிகபட்ச சேமிப்பு. அதை மாற்ற வேண்டும் என்று வங்கிக்கு எடுத்துச்செல்ல சாலை வசதிகளற்ற தடத்தில் 80 கி.மீ., பயணித்து வங்கிக்கு எடுத்துச் செல்லவேண்டும். வங்கிக்கு செல்ல மட்டுமே ஒரு நாள் ஆகும். இதை எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நிச்சயம் யோசித்துக் கூட பார்க்க விரும்பமாட்டார்கள் என்றனர் அந்த மக்கள்.

இந்திய எல்லையில் பணமாற்றம்
அத்தனை கி.மீ நடந்து வந்தாலும் அந்த சிறிய வங்கிக்கிளை திறந்து ,இருக்குமா என்று தெரியாது அதனால், எல்லைகளில் வசிப்பவர்கள் வேறு வழி இல்லாமல் நேபாளம், மியான்மர் நாடுகளின் நோட்டுகளை மிகவும் குறைந்த விலைக்கு மாற்றிச் சென்று இருக்கிறார்கள் என மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே எல்லாவிதங்களிலும் மோசமாக இருக்கும் இந்த மாநிலங்கள் அரசின் நடவடிக்கையால் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன.

வடகிழக்கு மாநில வங்கிகள்
வடகிழக்கு மாநிலங்களில் வங்கி, ஏ.டி.எம் போன்றவை மிக அரிதானவை. எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆதார் கணக்கு கேட்கும் அரசு இன்னும் இந்த மாநிலங்களில் முறையான எண்ணிக்கையில் வங்கிகளைக் கூட திறக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து பணத்தை மாற்றச்சென்றவர்களிடம் அங்கிருந்த சில அதிகாரிகள் மோசமான முறையில் நடத்தி இருக்கிறார்கள், சிலர் 10-30% கமிஷன் பிடிக்கச் சொல்லி அரசு உத்தரவு என்று அந்த ஏழை மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

உதவி செய்த தன்னார்வ அமைப்புகள்
வங்கியில் பணத்தை மாற்றத் தெரியாத பலருக்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி இருக்கின்றன. மேலும், மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாததால் தனியாக மருத்துவமுகாம்களை பல மாதங்கள் நடத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மக்களின் இந்த வலி புரியாத அரசு தான் டிஜிட்டல் இந்தியா என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications