ராமர் கோவில் கட்ட சிக்னல் கொடுக்கப்பட்டதா? மோடி மவுனம் கலைக்க 'அயோத்தி' மனுதாரர்கள் வலியுறுத்தல்!
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று அயோத்தி ராமர் கோவில் வழக்கின் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அயோத்தியில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு வரை இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் 'கடவுள்' ராமன் பிறந்தார் எனக் கூறி அதை 1992 டிசம்பர் 6-ந் தேதி இந்துமதவாதிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 ஆக பிரித்தது. இந்துமகாசபை, இஸ்லாமிய சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அகாடா ஆகிய 3 பிரிவினருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை பிரித்து தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்து மகாசபையும் சன்னி வக்பு வாரியமும் மேல்முறையீடு செய்தன. இதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு அயோத்தியில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த விஸ்வ ஹிந்து பரிஷத், ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இருந்தும் கற்கள் பெறப்படும் என அறிவித்தது. அப்போது பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் மறைந்த அசோக் சிங்கால், ராமர் கோவில் கட்டுவதற்கு மொத்தம் 2.5 லட்சம் கன அடி கற்கள் தேவை. இதில் பாதியளவு கற்கள் அயோத்தி கரசேவைபுரம் (சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகே) குவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய கற்கள் நாடு முழுவதும் இந்து பக்தர்களிடம் இருந்து பெறப்படும் எனக் கூறியிருந்தார்.
இருப்பினும் எப்போது கற்கள் திரட்டப்படும் என அறிவிக்கப்படாத நிலையில் அசோக் சிங்கால் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் திடீரென 2 நாட்களுக்கு முன்னர் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் 2 லாரி கற்களை கொட்டினர். அதற்கு ராமஜன்ம பூமி நியாஸின் தலைவர் மகந்த் நிருத்ய தாஸ் பூஜையும் செய்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியிடம் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்கான சிக்னல் கிடைத்துவிட்டது; 2017ஆம் ஆண்டுக்குள் ராமர் கோவிலை கட்டிவிடுவோம் என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது.
தற்போது சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவில் வழக்கின் மனுதாரர்களும் இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கின்றனர். அயோத்தி வழக்கின் மனுதாரர்களில் ஒருதரப்பு நிர்மோனி அகாடா. இந்த அகாடாதான் 1949ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை வைத்தது. இதன் பின்னரே ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிர்மோனி அகாடாவின் வழக்கறிஞர் தருண்ஜீத் லால் வர்மா கூறுகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் நிருத்ய கோபால் தாஸ். அவர் ஒரு கருத்தை தெரிவித்தால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இதனால் பிரதமர் மோடிதான் ராமர் கோவில் கட்ட சிக்னல் கொடுத்தாரா என்பது குறித்து விளக்கம் தர வேண்டும். அவர் மவுனமாக இருப்பது என்பது நீதிமன்ற நடைமுறைகளை குழிதோண்டி புதைக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகும் என்றார்.
அயோத்தி வழக்கில் மற்றொரு மனுதாரரான ஹாசீம் அன்சாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி என்ன கூறினார் என்பது விளக்கப்பட வேண்டும். நாடு விடுதலை அடைந்தது முதலே பாபர் மசூதியை ராமர் கோவிலாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் சட்டத்தை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அனைத்து தரப்புமே உச்சநீதிமன்றம் அளிக்கிற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்றார்.
அதேபோல் ராமஜன்ம பூமி தலைமை அர்ச்சகரான ஆச்சார்ய சத்யேந்திர தாஸும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச தேர்தலை முன்வைத்து மக்களை பிளவுபடுத்துகிறது விஸ்வ ஹிந்து பரிஷத். அந்த இயக்கத்துக்கு ராமர் கோவில் கட்டுவது முக்கியம் அல்ல. சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதே நோக்கம்.
ஆகையால் பிரதமர் நரேந்திரடி மோடி, ராமர் கோவில் கட்ட சிக்னல் கொடுத்தாரா என்பது குறித்து மவுனம் கலைத்து விளக்க வேண்டும். இல்லையெனில் அவரும் சமூகத்தை பிளவுபடுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நடவடிக்கைக்கு துணைபோகிறார் என்றே அர்த்தம் என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications