பாஜக அணிக்கு 300 சீட்.. ஆரூடம் சொன்ன டெல்லி தொழிலதிபருக்கு மோடி நன்றி கடிதம்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும் என்று கணித்த டெல்லி தொழிலதிபர் விஜய் பன்சாலுக்கு நரேந்திர மோடி நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் தொழிலதிபர் விஜய் பன்சால். இவர் கடந்த 1984ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 365 இடங்கள் கிடைக்கும் என்று கணித்து அப்போது ராஜிவ் காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் ஜோதிடக்காரர்களோ 225 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று அப்போது கூறி வந்தனர்.

இருப்பினும் 400 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து விஜய் பன்சாலை வரவழைத்து தேநீர் விருந்து கொடுத்தார் ராஜிவ் காந்தி. கடந்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பன்சால் கணித்திருக்கிறார். இதை அரவிந்த் கேஜ்ரிவாலிடமே தெரிவித்த போது அவரே நம்பவில்லையாம். ஊடகங்கள் அனைத்தும் 6 இடங்கள்தான் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் என்று கூறின.
ஆனால் பன்சால் கணிப்பின்படி 28 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்ற அரவிந்த் கேஜ்ரிவால் விஜய் பன்சாலை வரவழைத்து தேநீர் விருந்து கொடுத்தாராம். இப்போது பாஜக தலைமையிலான கூட்டணி 300 இடங்களைக் கைப்பற்றும் என அக்கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மற்றும் நரேந்திர மோடிக்கு பன்சால் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இவர்களில் நரேந்திர மோடி மட்டும் பன்சாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications