நடிகை வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல. . மேற்குவங்க முன்னாள் அமைச்சர் சட்டர்ஜி விளக்கம்
கொல்கத்தா: நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த பணம் தன்னுடையது அல்ல என்று முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார் .
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இவரது அமைச்சர் அவையில், 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி வணிகம் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக இருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மட்டுமல்லாது, மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவரும் கூட. மம்தாவின் முந்தைய ஆட்சியின்போது 2014-2021-ம் கால கட்டத்தில் கல்வி மந்திரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கட்டாக பணம்
இந்த நிலையில், அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நெருங்கியவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி உள்ளிட்ட நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் ரெய்டில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

50 கோடி ரூபாய்
அவரது வீட்டில் இருந்து மட்டும் 500 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என கோடிக்கணக்கான பணம் இந்த ரெய்டில் சிக்கியது. மொத்தம் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் சுமார் ரூ.50 கோடி ரொக்கம் கைப்பற்றபட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜிக்கு, அவரது மந்திரிக்கு தொடர்புடைய இடங்களில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியிருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

பதவியில் இருந்து நீக்கம்
இதையடுத்து பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி தூக்கினார். கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக பதில் அளித்த பார்த்தா சட்டர்ஜி, அமைச்சர் பதிவியில் இருந்து நான் நீக்கப்பட்ட விவகாரத்துக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பெரிய சதி நடந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதை விமர்சித்த பாஜகவினர் 'சதி நடந்துள்ளது என்றால் இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களின் பெயரை பார்த்த சட்டர்ஜி குறிப்பிட வேண்டும்' என தெரிவித்தனர். அமலாக்கத்துறையும் இது தொடர்பாக பார்த்தா சட்டர்ஜியுடன் சதியில் ஈடுபட்டவர்களின் பெயரை குறிப்பிட வேண்டும் என தெரிவித்திருந்தது.

என்னுடைய பணம் இல்லை
இதற்கிடையே, அமலாக்க துறையின் காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மருத்துவ பரிசோதனைக்காக கொல்கத்தாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜோகா நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த பார்த்தா சட்டர்ஜி, ''கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய அல்ல" என்றார். உங்களுக்கு எதிராக எதுவும் சதித்திட்டம் நடைபெறுகிறதா? என நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த பார்த்தா சட்டர்ஜி, நேரம் வரும் போது அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications