தென்மேற்கு பருவமழை... ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களிலும் மழைப் பொழிவு
டெல்லி: தென்மேற்கு பருவமழை காரணமாக ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் மழை பொழிவை கொடுத்து வருகிறது. அதன்படி ஒடிஷா, மேற்கு வங்கம் அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பொழிவு தொடங்கியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்றுவரையில், பாலசோர், ஜெய்ப்பூர், பாட்ராக், பூரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனழை பொழிந்துள்ளது.
ஒடிஷாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களில் மழை பொழிவு தொடங்கும். மாநிலத்தின் மத்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இது அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடும்படியாக பவானிபாட்னா பகுதியில் 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இதேபோல, மேற்கு வங்கத்திலும் அதிக மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக பான்குரா குதியில் 45.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பின்வரும் நாட்களில் பான்குரா மற்றும் பர்டுவான் பகுதியில் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கொல்கத்தா, மேற்கு வங்க கங்கை பகுதி ஆகிய பகுதிகளில் இன்னும் சில நாட்களில் மழைப் பொழிவு தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications