மாவோயிஸ்டுகளை விட மாரடைப்பால் அதிகம் பலியாகும் சிஆர்பிஎப் வீரர்கள்
டெல்லி: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அதிகம் இறப்பதற்கு காரணம் கொசுக்கள் என்று தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை எதிர்த்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் போராடி வருகின்றனர். மாவோயிஸ்டுகள் இருக்கும் 106 மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மாவோயிஸ்ட் தாக்குதல்களை விட பலவித நோய்களுக்கு பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,
2012
2012ம் ஆண்டு 12 போலீசார் மலேரியாவாலும், 24 பேர் மாரடைப்பாலும், 39 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
2013
2013ம் ஆண்டில் 2 பேர் மலேரியாவாலும், 20 பேர் மாரடைப்பாலும், 36 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
2014
2014ம் ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல்களில் 50 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாகியுள்ளனர். ஆனால் 95 போலீசார் பல்வேறு நோய்களுக்கு பலியாகியுள்ளனர். அதில் 27 பேர் மலேரியாவாலும், 35 பேர் மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.
2015
இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலியாகியுள்ளனர். அதே சமயம் ஒருவர் மலேரியாவாலும், 7 பேர் மாரடைப்பாலும், 7 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர்.
மருந்துகள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு போதிய மருந்துகள் அளித்து, சுகாதார முகாம்கள் நடத்தி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க வசதி இல்லாததும், வேலைப்பளுவும் தான் பல வீரர்கள் இறக்க காரணம் என்று கூறப்படுகிறது.