"லஷ்மி"யை கவர்ந்திழுங்கள்.. "சரஸ்வதி"யை மகிழ்வியுங்கள்.. ஆணிடம் என்ன உள்ளது.. பாஜக சீனியர் பகீர்
சர்ச்சை பேச்சு குறித்து பாஜக எம்எல்ஏ பேசியது இணையத்தில் விவாதமாகி வருகிறது
டேராடூன்: பாஜக எம்எல்ஏ ஒருவர் பெண் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தராகண்ட் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பன்ஷிதர் பகத்.. இவர் எப்போதுமே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்..
நைனிடால் மாவட்டம், கலதுங்கி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.. பாஜகவில் இருந்து கொண்டே, சொந்த கட்சிக்கு எதிராக சில நேரம் இவர் பேசிவிடுவார்.. அதனால், கட்சிக்குள்ளேயே கலக்கமும் பலமுறை ஏற்பட்டுள்ளது.
"பிரதமர் மோடியின் பெயரில் வாக்குகளை பெறுவது இப்போது நடக்காது... இந்த முறை மோடி அலையில் வந்துவிடலாம் என்று மட்டும் யாரும் கணக்கு போடாதீங்க.. நீங்கள் கடுமையாக உழைத்தால்தான், சட்டப்பேரவை தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற முடியும்" என்று ஒருமுறை இவர் பன்ஷிதர் பகத் கூறியிருந்தார்.
அதேபோல, 2021 ஜனவரியில் உத்தரகாண்ட்டில் பாஜக தலைவராக பன்ஷிதர் பகத் பொறுப்பில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை வயதான பெண் என்றும், காங்கிரஸை மூழ்கும் கப்பல் என்றும் கூறி, அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் தரப்பினரின் கடுமையான எரிச்சலுக்கும் ஆளானார்.
இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.. உத்தரகாண்டில் ஹல்த்வானியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இதில், பன்ஷிதர் பகத் கலந்து கொண்டார்.. விழாவில் பன்ஷிதர் பகத் பேசும்போது, "கடவுளும் உங்களுக்கு உதவி செய்துள்ளார். நீங்கள் புத்திசாலித்தனத்தைப் பெற விரும்பினால், சரஸ்வதியை கவர்ந்திழுங்கள். அறிவுக்கு சரஸ்வதி தேவியை மகிழ்விக்க வேண்டும்.. சக்தி மற்றும் வலிமைக்காக துர்கா தேவியை மகிழ்விக்க வேண்டும்..
செல்வம் மற்றும் வெற்றிக்கு ஒருவருக்கு லட்சுமியை கவர்ந்திழுங்கள். ஆனால் இந்து மதத்தில் ஒரு ஆணுக்கு என்ன இருக்கிறது?. நம்மிடம் ஒரு சிவ் ஜி (சிவன்) இருக்கிறார்.. ஆனால், அவர் மலையில் இருக்கிறார். மகாவிஷ்ணு ஆழ்கடலில் படுத்துள்ளார்.. இந்து மதத்தில் நீண்ட காலத்துக்கு முன்பே பெண்களுக்கு அதிகாரம் நிலவி வருகிறது என்று பேசியுள்ளார்.. பெண் கடவுள்களை கவர்ந்திழுக்குமாறு பாஜக முக்கிய பிரமுகரே இப்படி பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.