கொரோனாவுக்கு தப்பி மூணாறு வந்தாங்க... இப்படி மண்ணோட போயிட்டாங்களே - கதறும் தாய்
கொரோனாவிற்கு தப்பி வந்த பிள்ளைகள் இப்படி வெள்ளத்தில போயிட்டாங்களே என்று கதறி வருகிறார் ஒரு தாய்.
மூணாறு: என்னோட 2 பையனுங்களும் கொரோனாவுக்கு தப்பி இங்க எஸ்டேட்டுக்கு வந்தாங்க. இப்படி போவாங்கன்னு நான் நினைக்கலையே என்று கதறி துடிக்கும் காட்சியை தொலைக்காட்சி மூலமாக பார்க்கும் பலரையும் கண் கலங்க வைக்கிறது. மூணாறு நிலச்சரிவில் பிள்ளைகளையும், உறவினர்களையும் பறிகொடுத்தவர்களும் மீட்புப்பணி நடைபெறும் இடங்களில் உடலையாவது பார்த்து விட மாட்டோமா என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.
விடாமல் கொட்டிய மழையால் மலை மீதிருந்து ஆக்ரோஷமாக வந்தது வெள்ளம். தாழ்வான பகுதியில் இருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மட மட வென சரிந்தது. இதில் 22 குடும்பங்கள் இருந்தன. 2 குடும்பங்கள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக தப்ப 70க்கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தேயிலை எஸ்டேட் மேற்பார்வையாளர் மேகநாதனும் இந்த விபத்தில் இருந்து தப்பியவர்தான். விபத்து பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாமல் போனது விடாமல் பெய்த மழை வெள்ளத்திற்கு நடுவேயும் ராஜமலைக்கு போய் தகவலை சொன்னதும் மீட்பு படையினர் வந்து சேர மறுநாள் காலையாகிவிட்டது.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய கோவில்பட்டியைச் சேர்ந்த 55 பேரின் கதி என்ன - உறவினர்கள் கதறல்
கடும் மழை வெள்ளத்திற்கு நடுவிலும் இந்த விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகிறது. இதுவரை 25 பேர் சடலமாகவும், 15 பேர் உயிரோடும் மீட்கப்பட்டுள்ளனர். 44 பேரின் கதி என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.
மண்ணில் புதைந்தவர்களில் சில கர்ப்பிணிகளும் இருக்கிறார்களாம். உடலாவது கிடைத்தால் இறுதி காரியம் செய்ய முடியும் என்று கண்ணீருடன் சொல்கின்றனர் உறவினர்கள்.
இதில் ஒரு தாயின் கண்ணீர் காண்பவர்களை கலங்க வைக்கிறது. என் பிள்ளைங்க 2 பேர் காலேஜ்ல படிக்கிறாங்க. கொரோனாவுக்கு லீவு விட்டுருக்காங்க. அங்க இருந்து இங்க வந்து 4 மாசம் ஆச்சு. இப்படி போயிட்டாங்களே... கொரோனாவுக்கு தப்பியவங்க இப்படி மண்ணோட மண்ணா போயிட்டாங்களே என்று கதறி துடிக்கிறார் அந்த தாய்.
இயற்கைக்கு கொஞ்சம் கூட கருணை இல்லாமல் போய்விட்டதே என்றும் கலங்குகின்றனர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்.