ம.பியில் திடீர் திருப்பம்! பாஜகவுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மாஜி 'பங்காளி'கள் கட்சி 200 இடங்களில் போட்டி!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக 230 தொகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.- பாஜக: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டின் தீவிர இந்துத்துவா கோட்பாடுகளை முன்வைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள்தான் இன்றைய மத்தியில் ஆளும் பாஜகவின் பெரும்பாலான தலைவர்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் பிரிவுதான் பாஜக. இதனாலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலியுறுத்துகிற தீவிர இந்துத்துவா கோட்பாடுகளை மத்தியில் ஆளும் பாஜக செய்தும் வருகிறது.

மத்திய அரசும் பாஜகவும்: மத்தியில் பாஜக ஆட்சி செய்தாலும் அதன் கடிவாளம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திடம் இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களும் மத்திய பாஜக அரசின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்து ஆராய கூட்டம் நடத்துவதும் வழக்கம்.
பாஜகவுக்கு எதிராக மாஜி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்: இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளே களமிறங்கி இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு விலகியவர்கள் ஒன்று கூடி ஜன்கித் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ளனர். அபய் ஜெயின் என்பவரை தலைவராகக் கொண்டு ஜன்கித் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
200 இடங்களில் பாஜகவை எதிர்த்து போட்டி: ம.பி. சட்டசபை தேர்தலில் ஜன்கித் கட்சியானது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து அபய் ஜெயின் கூறுகையில், பாஜகவின் செயல்பாடுகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. நாங்கள் உண்மையான இந்துத்துவா கோட்பாட்டை செயல்படுத்த விரும்புகிறோம். பாஜகவின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். பாஜகவின் வாக்குகளைத்தான் நாங்கள் பிரிக்க போகிறோம் என்றால் 2018 சட்டசபை தேர்தலில் பாஜக ஏன் தோற்றது? எனவும் கேள்வி எழுப்பினார்.
பாஜகவுக்கு பெரும் அச்சம்: பொதுவாக மாநிலங்களில் பாஜகதான் பிரதான கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தி தேர்தல் ஆட்டங்களை விளையாடும். இப்போது பாஜகவுக்கு பயம் காட்டும் வகையில் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளே ம.பி.யில் எதிராக தேர்தலிலும் போட்டியிடுவோம் என அறிவித்திருப்பது டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications