குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து:உயிரிழந்த ஜிதேந்திர குமார் குடும்பத்துக்கு ம.பி அரசு ரூ1கோடி நிதி உதவி
போபால்: குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜிதேந்திர குமார் வர்மா குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் ஜிதேந்திர குமார் மனைவிக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல் நேற்று முன்தினம் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத்தின் 2 மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். 17 பீரங்கி குண்டுகள் முழங்க, 800 ராணுவ அதிகாரிகள் மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.

நாயக் ஜிதேந்திர குமார்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் ஜிதேந்திர குமாரும் குன்னூர் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ரூ1 கோடி நிதி உதவி
இதனைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் சிவராஜ்சிங் சவுகான் பதிவிட்டுள்ளதாவது: ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மண்ணின் மகன் ஜிதேந்திர குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். அவரது குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படும். ஜிதேந்திர குமாரின் மனைவி சுனிதாவுக்கு அரசு பணி வழங்கப்படும்.

போபாலில் இறுதி மரியாதை
தமந்தா கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தின் பெயருக்கு ஜிதேந்திர குமார் பெயர் சூட்டப்படும். இவ்வாறு சிவராஜ்சிங் சவுகான் பதிவிட்டுள்ளார். முன்னதாக தலைநகர் போபாலில் ஜிதேந்திர குமார் உடலுக்கு ராணுவ அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் தமந்தா கிராமத்துக்கு ஜிதேந்திர குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஜிதேந்திர குமாருக்கு வீரவணக்கம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமந்தா கிராமத்தின் மகன் மட்டுமல்ல ஜிதேந்திர குமார். மத்திய பிரதேசம் மற்றும் நாட்டின் பெருமைக்குரிய புதல்வன். அவருக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications