பசுக் காவலர் போர்வையில் அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை: மத்திய பிரதேச அரசு அதிரடி!
போபால்: பசுக்காவலர் போர்வையில் அப்பாவிகளை தாக்கும் வன்முறையாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பசுக்களை பாதுகாப்பதாக கூறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், சில சமயம் இது கொலையில் கூட முடிந்துள்ளது. இதனை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்ததரவிட்டது.

பசுக்காவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கு மாவட்ட அளவில் சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில்,இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, கடந்த 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பசுவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஜூலை 8ந் தேதி துவங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த புதிய சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும்போது, மாட்டிறைச்சி கூடங்கள் மற்றும் மாட்டிறைச்சி எடுத்துச் செல்லும் ஆட்கள் மீது தாக்குதல் நடத்தும் வன்முறையாளர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
இதேபோன்று வன்முறையில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு தண்டனை இரட்டிப்பாக வழங்கவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கும்பலாக வன்முறை நிகழ்த்தினால் அதிகபட்ச தண்டனை வழங்கவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். நாட்டிலேயே முதலாவது மாநிலமாக, மத்திய பிரதேசத்தில் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications