"சனாதனத்தை அவமதித்துவிட்டார் கமல்நாத்".. பொங்கும் பாஜக.. அனுமார் வடிவ கேக்கை வெட்டியதால் சர்ச்சை
போபால்: அனுமார் கோயில் வடிவத்திலான கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியதால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த கேக்கை வெட்டியதன் மூலம் அவர் இந்து மதத்தையும், சனாதனத்தையும் அவமதித்துவிட்டதாக ஆளும் பாஜகவினர் கொதித்தெழுந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் கமல்நாத் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ள பாஜக நிர்வாகிகள், அவருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகின்றனர்.

காங்கிரஸும் இந்துத்துவாவும்..
ஒருகாலத்தில், பாஜகவின் தீவிர இந்துத்துவா அரசியலை கடுமையாக எதிர்த்து வந்த கட்சிகளில் முதன்மையாக இருந்தது காங்கிரஸ். ஆனால், 2014-இல் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக இந்தியாவில் இந்துத்துவாவாதம் ஓரளவுக்கு பலம் பெறத் தொடங்கியது. இதனை கவனித்த காங்கிரஸ், இனி இந்துத்துவாவை கடுமையாக எதிர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தது. அத்துடன், மித இந்துத்துவ அரசியலை கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டையும் ஏற்றது. இதன் காரணமாகவே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வெளிப்படையாக இந்துக் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வதை சில ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டனர். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்து மதம் சார்ந்த சடங்குகளை வெளிப்படையாக செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர். அதாவது, நாங்கள் இந்துத்துவத்துக்கு எதிரி இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

அனுமார் வடிவத்தில் கேக்..
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் 76-வது பிறந்தநாளை தொண்டர்கள் இன்று கொண்டாடினர். இதையொட்டி, கமல்நாத்தின் சொந்த தொகுதியான சிந்த்வாராவில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவரது பிறந்தநாள் கேக்கானது, அனுமார் கோயிலின் வடிவத்திலும், அதன் மீது அனுமார் சிலை க்ரீமும், காவிக் கொடியும் இருந்தன. இந்து மதத்தினரை ஈர்ப்பதற்காகவே, காங்கிரஸார் கோயில் வடிவத்தில் கேக் செய்ததாக கூறப்படுகிறது.

வெடித்தது சர்ச்சை..
இதையடுத்து, அந்தக் கேக்கை கமல்நாத் வெட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டது. இதனை பார்த்த பாஜகவினரும், இந்துத்துவ அமைப்பினரும் கொதித்தெழுந்துள்ளனர். எப்படி அனுமார் கோயிலையும், அனுமாரையும் கத்தியால் நீங்கள் வெட்டலாம் என அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "கமல்நாத்துக்கும், அவர் இருக்கும் காங்கிரஸும் போலி இந்து பக்தர்கள். அவர்களுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் சம்பந்தம் இல்லை.

"சனாதனம் அவமதிப்பு.."
ஒருகாலத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிதானே காங்கிரஸ். ஆனால், இப்போது மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து பக்தி வந்து கொட்டியது? இந்து மதத்தை எதிர்ப்பதால் தனக்கு வாக்கு வங்கி குறைகிறது என்பதை உணர்ந்ததால், ஏதோ இந்து பக்தர்கள் போல அக்கட்சியினர் வெளிவேஷம் போடுகின்றனர். உண்மையான பக்தன் யாராவது, இந்து கோயில் வடிவத்திலான கேக்கை வெட்டுவார்களா? இந்த காரியத்தை செய்ததன் மூலம் இந்து மதத்தையும், சனாதனத்தையும் கமல்நாத் அவமதித்துவிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications