பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் மனு
தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை மைத்ரேயன் எம்பி இன்று சந்தித்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரி மனு அளித்துள்ளனர்.
டெல்லி: ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் ராஜ்ய சபா எம்பி மைத்ரேயன் தலைமையின் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து 5 ஆண்டுகள் இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தார்.
அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் சசிகலா புஷ்பா அளித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை சசிகலாவிற்கு அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு இதுவரை அதிமுகவில் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார். அவருடன் பி.எச். பாண்டியன், வழக்கறிஞர் ரவீந்தரனும் சென்றனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.
மேலும், தண்டனை பெற்ற சசிகலாவை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.