6 ஜனதா தள கட்சிகள் ஒன்றாக இணைய முடிவு- இணைப்பு பணியை மேற்கொள்கிறார் முலாயம்சிங்!
டெல்லி: ஜனதாதளத்தில் இருந்து பிரிந்த 6 கட்சிகள் ஒன்றாக இணைய முடிவு செய்துள்ளன. இதற்கான நடைமுறை பணிகளை மேற்கொள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்குக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
ஜனதாதளம் கட்சியில் இருந்து சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாடி ஜனதா ஆகிய கட்சிகள் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க இந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்த 6 கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவின் டெல்லி வீட்டில் நடைபெற்றது.
இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், நிதிஷ் குமார், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தேவே கவுடா, லோக்தளத்தின் துஷ்யந்த் சவுதாலா, சமாஜ்வாடி ஜனதாவின் கமல் மொரார்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 6 கட்சிகளும் ஒன்றாக இணைவது என்று முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டம் முடிவடைந்த பிறகு, ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் அனைவருக்கும் ஒரே கொள்கை, கோட்பாடுதான். எனவே, ஒரே கட்சியாக இணைய வேண்டும் என்று அனைவரும் கருதினோம்.
இந்த இணைப்பு குறித்த நடைமுறை பணிகளை மேற்கொள்ள சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்குக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். டெல்லியில், 22-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்துவோம்.
நரேந்திர மோடி மீதான அச்சத்தில், நாங்கள் ஒன்றாக இணைவதாக கருதக்கூடாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஒரே போராட்ட களத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.