007 ஆகும் இல்லத்தரசிகள்... வீட்டில் இருந்தபடியே ‘போட்டுக்’ கொடுப்பார்கள்!
மும்பை: பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜண்டுகளாக குடும்பத் தலைவிகளை மாற்றும் புதிய திட்டம் ஒன்றை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர்.
மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் கடந்தாண்டு சுமார் 71 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் மைனர் குற்றவாளிகள் செய்தது. எனவே, இவற்றைக் குறைக்க அப்பகுதி போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.

அதன்படி, குடும்பத் தலைவிகளை பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜெண்டாக மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் முதல்கட்டமாக ஐந்து குடும்பத் தலைவிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து, இதற்கான பயிற்சி அளித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த 5 பேரும் அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் வசித்து வருபவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு பெண் பித்தர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது தொடர்பான பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி இணை கமிஷ்னர் தேவன் பாரதி கூறுகையில், ‘ஆம் இது முன்னோட்டம் தான். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் பெண்கள் மும்பை போலீசின் கண் மற்றும் காதாக செயல்பட்டு பல ரகசிய தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முதல்கட்டமாக அங்கு இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி பெற்று போலீசின் ரகசிய ஏஜெண்டாக செயல்பட உள்ள பெண்களின் விபரங்கள் போலீசில் ரகசியமாக வைக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர பலாத்கார தடுப்பு தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications