புரமோஷன் கொடுத்து ஊர்க் காவல் படைக்குத் தூக்கி அடிக்கப்பட்டார் மும்பை போலீஸ் கமிஷனர்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை மிகத் துரிதமாகவும், மிகத் தீவிரமாகவும் கண்காணித்து வந்த மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா திடீரென டிஜிபியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு ஊர்க் காவல் படைக்கு மாற்றப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கை நேரடியாக கண்காணித்து வந்தார் ராகேஷ் மரியா. மேலும் இரவு பகல் பாராமல் இந்த வழக்கில் ஆர்வமும் செலுத்தி வந்தார். தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகளை இந்த வழக்கில் முழு வீச்சில் களம் இறக்கினார். ஷீனா போரா கொலை செய்யப்பட்டார் என்ற துப்பு கிடைத்தது முதல் இந்த வழக்கில் வரலாறு காணாத ஆர்வம் காட்டி வந்தவர் ராகேஷ் மரியா.
மேலும் மும்பை போலீஸ் கமிஷனராக பதவிக்கு வந்தது முதல் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியிராத இவர் ஷீனா போரா கொலை தொடர்பாக ரெகுலராக செய்தியாளர்களைச் சந்தித்தது வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென இவருக்கு டிஜிபி பதவி உயர்வு கொடுத்து ஊர்க்காவல் படைக்கு தூக்கி அடித்துள்ளது மகாராஷ்டிர அரசு. புதிய கமிஷனராக அகமது ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக மிக முக்கியமான வழக்கை ராகேஷ் மரியா கையாண்டு வந்த நிலையில் அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து உப்புச் சப்பில்லாத துறைக்கு மாற்றியிருப்பது மும்பையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.