ஜெய் ஸ்ரீ ராம்.. கோஷம் எழுப்ப வற்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்.. உ.பி.யில் ஒருவர் கைது!
மதுரா: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரை ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவ்வப்போது பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பின்னர், இஸ்லாமியர் மீதான தாக்குதல் சம்பவங்கள், இஸ்லாமியர்க்கு எதிராக கோஷங்கள் அதிகரித்துள்ளன.
ஜெய் ஸ்ரீராம்: பாஜக கோஷத்தால் அதிர்ந்த மேடை- “அட அமைதியா இருங்கப்பா” மீண்டும் மீண்டும் சொன்ன ஆளுநர்!
இஸ்லாமியரை சீண்டிய நபர்
அண்மையில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை மூலம் இஸ்லாமியர்கள் கடுமையாக குறிவைக்கப்பட்டனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இஸ்லாமியரை ஒருவரை பிடித்து இந்து மத பற்றாளர்கள், அவரை ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட கோஷங்களை எழுப்ப வற்புறுத்தியுள்ளனர். இதனால் எதுவும் செய்ய இயலாத அந்த இஸ்லாமியர், ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியுள்ளார். அப்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் கொலை செய்யப்பட்டதற்கு இஸ்லாமியர் தான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.
ஒருவர் கைது
அதுமட்டுமின்றி இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
என்ன நடந்தது?
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், மதுராவில் உள்ள தர்மபுரா கால்வாய் அருகே வசித்து வருபவர் முபின் முகமது. கடந்த திங்கட் கிழமை அவர் தனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தீவனம் தேடி வந்துள்ளார். அப்போது அவரைப் பிடித்த ஜிதேந்திர என்பவர், அவரை ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று கூறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக முபின் முகமது காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஜிதேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க காவல்துறை யாரையும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர் விளக்கம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இஸ்லாமியரான முபின் அகமது கூறுகையில், தனது கிராமத்தில் சகோதரத்துவ உணர்வைப் பேண வேண்டும் என்பதற்காக தன்னை தாக்கியவர்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் தான் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அறிந்தேன். அதன் பின்னரே போலீசில் புகாரளிக்க முடிவு செய்தார் என்று தெரிவித்துள்ளார்.