முசாபர்நகரில் மேலும் ஒரு பயங்கரம்... முகாமில் இருந்த பெண் பலாத்காரம்
முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கர வன்முறை மற்றும் கொலை வெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒரு முகாமில் தங்கியிருந்த 20 வயதுப் பெண்ணை இரண்டு நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த இருவரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு முசாப்நகரில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. ஜாட் இனத்தவர்கள் ஒன்று திரண்டு, முஸ்லீம்களை குடும்பம் குடும்பமாக தாக்கினர். பலர் இதில் பலியானார்கள். பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
வீடுகளை இழந்து கிட்டத்தட்ட 40,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், ஜோக்யா கேரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு முகாமில் தங்கியிருந்த 20 வயதுப் பெண் தனது எட்டு வயது தங்கையுடன் இலை தழை பொறுக்குவதற்காக முகாமை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது புகானா கிராமத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் சச்சின் ஆகிய இரு இளைஞர்களும் அந்த 20 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
அருகில் உள்ள கரும்புக் காட்டுக்குள் இழுத்துச் சென்று அப்பெண்ணை இருவரும் சீரழித்துள்ளனர். பின்னர் இருவரும் ஓடி விட்டனர். ரத்தக் காயத்துடன் அப்பெண் தனது தங்கையுடன் சாலையில் விழுந்து கிடந்து கதறித் துடித்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸுக்குப் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த இரு இளைஞர்களையும் தேடிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் முசாபர்நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications