ஆளுநர் ரவி அன்று பற்ற வைத்த நெருப்பு.. மணிப்பூர் விவகாரத்தில் 'நாகா’ மக்கள் மீண்டும் விஸ்வரூபம்!
இம்பால்: மணிப்பூர் விவகாரத்தில் நாகா இனமக்களும் இப்போது போராட்டத்தில் இறங்கிவிட்டனர். மணிப்பூரின் குக்கி இனமக்கள் கேட்கும் தன்னாட்சி கவுன்சிலால் நாங்கள் பாதிக்கப்பட்டால் நிலைமை மோசமாகும் என எச்சரித்துள்ளனர் நாகா இன மக்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, நாகா, மைத்தேயி இனக்குழுக்கள் கணிசமாக வாழ்கின்றனர். இப்போது குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேதான் வன்முறை நடைபெற்று வருகிறது. நாகா இன மக்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிசோரமுடன் சேருவார்கள்?: மைத்தேயி இனத்தவரால் பாதிக்கப்பட்ட குக்கி இனமக்கள், தாங்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு தன்னாட்சி கவுன்சில் அமைக்க கோருகின்றனர். இந்தக் கோரிக்கையை மிசோரம் மாநில அரசும் ஆதரிக்கிறது. அதேநேரத்தில் இன்று குக்கி தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டால் அந்த இனமக்கள் நாளை அவர்களது தொப்புள் கொடி உறவான மிசோ மக்கள் வாழும் மிசோரம் மாநிலத்துடன் இணைந்துவிடுவர் என மைத்தேயி மக்கள் எச்சரிக்கின்றனர்.
குக்கி கவுன்சில்: இது ஒருபுறம் இருக்க, தற்போதைய மணிப்பூர் சிக்கலுக்கு தீர்வாக குக்கி தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டால் தங்களை அது பாதிக்காமல் இருக்க வேண்டும் என நாகா இன மக்கள் வலியுறுத்துகின்றனர். மணிப்பூரின் மலைப் பகுதிகளில் நாகா, குக்கி இனமக்கள் வசித்து வருகின்றனர்.
நாகாலாந்து பிரச்சனை என்ன?: அஸ்ஸாம், மணிப்பூர் என வடகிழக்கு மாநிலங்களில் நாகா இனமக்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து- நாகாலிம் அமைக்க வேண்டும் என்பது அம்மக்களின் நீண்ட்கால கோரிக்கை. அகன்ற நாகாலாந்து எனும் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்தினர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நாகாலாந்து தனிநாடு போராட்டம் ஓய்ந்திருக்கிறது. நாகாலாந்து போராளிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. மத்திய அரசின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று பின் நாகாலாந்து ஆளுநராகவும் இருந்தார் ஆர்.என்.ரவி.

ஆர்.என்.ரவி மீது அதிருப்தி: போராளி குழுக்களிடையே பேச்சுவார்த்தைகளின் போது ஒரு உறுதி மொழி அளிப்பது; மத்திய அரசிடம் அதனையே வேறுவிதமாக தெரிவிப்பது என்கிற இரட்டை நிலை கொண்டவராக ஆர்.என்.ரவி செயல்பட்டார் என்பது நாகா போராளி குழுக்கள் இப்போதும் முன்வைக்கிற குற்றச்சாட்டு. அத்துடன் நாகாலாந்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் விவகாரங்களில் ஆளுநராக இருந்த ரவி தன்னிச்சையாக தலையிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால் நாகாலாந்து மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட போது நாகா இனமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நாகா மக்கள் நிலைப்பாடு: இப்போது மணிப்பூர் விவகாரத்தில், குக்கி மக்களுக்கு தன்னாட்சி கவுன்சில் அமைத்தால், ரவியுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளை செயல்படுத்தவும் தங்கள் தனித்துவத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் போராடுவோ-ம் என நாகா இனமக்கள் அறிவித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே நாகா- குக்கி இனத்தவரும் மிக உக்கிரமாக மோதிக் கொண்டவர்கள்தான். ஒரே நாளில் 113 குக்கி இனத்தவரை நாகாக்கள் படுகொலை செய்த வரலாறும் இருக்கிறது. தற்போதைய மைத்தேயி- குக்கி மோதல் அடுத்த மோசமான நிலைமையை எட்டாமல் சுமூகத் தீர்வை காண வேண்டியது மத்திய அரசின் கடமை என்கின்றனர் வடகிழக்கு மாநில பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications