எங்க மாநிலத்துக்கு எதிரானது- பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டசபை அதிரடி தீர்மானம்!
கோஹிமா: மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிராக பாஜகவும் இடம்பெற்றுள்ள நாகாலாந்து மாநில சட்டசபை அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.'

பொது சிவில் சட்டத்துக்கு நாட்டின் பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில் நாகாலாந்து மாநிலமும் ஒன்று. நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரையில் பொது சிவில் சட்டமானது தங்களது மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 371A -ன் கீழான சிறப்பு அந்தஸ்துக்கு எதிரானது என்கிற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
நாகாலாந்து சட்டசபையில் திங்கள்கிழமையன்று பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில், பொது சிவில் சட்டமானது நாகாலாந்து மக்கள் மீது திணிக்கக் கூடிய ஒரு சட்டமாகும். இது அரசியல் சாசனத்தின் கீழான சிறப்பு அந்தஸ்து வழங்குகிற 371A-க்கு துரோகம் செய்யக் கூடியது என்கிற கருத்து ஒருசேர வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாகாலாந்து சட்டசபையில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் நாகாலாந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்க கோரியும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நாகாலாந்து ஆளும் அரசியல் பாஜகவும் இடம் பெற்றுள்ள நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி இருந்தது. அதனடிப்படையில் அம்மாநில மக்களின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த 370-வது பிரிவை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தற்போது அதேபோல அரசியல் சாசனத்தின் 371A-ன் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் நாகாலாந்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications