ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய நாகாலாந்து அமைச்சரவை வலியுறுத்தல்!
கோஹிமா: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை -AFSPA ரத்து செய்ய வேண்டும் என்று நாகாலாந்து அமைச்சரவை மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் பலியாகினர்.
இதனையடுத்து பொதுமக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவ முகாம்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் நாகாலாந்து சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. மேலும் 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அமித்ஷா வருத்தம்
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 14 பேர் ராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். முன்னதாக ராணுவமும் இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இதேபோல் இனி ஒரு சம்பவம் நடக்காது என லோக்சபாவில் அமித்ஷா உறுதி அளித்தார்.

தொடரும் பதற்றம்
நாகாலாந்து மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை விசாரணைக்காக அமைத்துள்ளது. ராணுவமும் இச்சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அதிகாரியை கொண்ட விசாரணைக் குழு அமைத்துள்ளது. இருந்தபோதும் நாகாலாந்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நாகாலாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆயுத படை சட்டம் என்றால் என்ன?
நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் AFSPA சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின் படி எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சந்தேக நபர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இச்சட்டத்துக்கு ஜம்மி காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீண்டகாலமாக எதிர்ப்பு உள்ளது.

வடகிழக்கு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
தற்போது மீண்டும் இந்த சட்டம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஆயுதப் படையினருக்கு அதிகாரம் தரும் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து, மேகாலயா முதல்வர்கள் வலியுறுத்தி இருந்தனர். நாகாலாந்து பழங்குடி இன மக்களின் கூட்டமைப்பும் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றன.

நாகாலாந்து அமைச்சரவை முடிவு
இந்நிலையில் நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் நைபியு ரியோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மாநிலத்தில் இருந்து உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவும் நாகாலாந்து அமைச்சரவை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications