அதிமுக பாணியில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி..நாகாலாந்து முதல்வர் ஜிலியாங்க் ராஜினாமா!
தமிழகத்தை போன்று நாகாலாந்து மாநிலத்திலும் அசாதரணமான அரசியல் சூழல் நிலவி வருவதால் அம்மாநில முதல்வர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஹிமா: நாகாலாந்து முதல்வர் டிஆர் ஜிலியாங்குக்கு ஆதரவு தந்து வந்த எம்.எல்.ஏக்கள் தற்போது திடீரென எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அவர் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜிலியாங்க் பதவி வகித்து வருகிறார். ஜிலியாங்க் அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது.

இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 48 பேர் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் நியூபி ரியோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டது போன்று அங்குள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 48 பேரை ஒருங்கிணைத்து தங்கவைத்துள்ளார் நியூபி ரியோ. இதனைத் தொடர்ந்து நாகாலாந்து மக்கள் முன்னணியின் அவசர கூட்டம் இன்று நடக்க உள்ளது.
முன்னதாக நாகாலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த உத்தரவுக்கு நாகா இன மக்களின் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. முதல்வர் பதவியில் இருந்து ஜிலியாங்க் விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் அம்மாநிலத்தில் அசாதரண சூழல் நிலவி வருகிறது. சொந்த கட்சியில் எம்.எல்.ஏக்களின் எதிர்ப்பு, போராட்டக்காரர்களின் நெருக்கடியால் டிஆர் ஜிலியாங் முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications