கொரோனா லாக்டவுன்: நாகாலாந்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்- அஸ்ஸாமில் மதுகடைகள் திறப்பு
கோஹிமா/குவஹாத்தி: கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் இன்று முதல் அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. அஸ்ஸாமில் முதல் கட்டமாக மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இன்று 20-வது நாளாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது இன்று அல்லது நாளை தெரியவரும்.

அதேநேரத்தில் ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்கள் லாக்டவுனை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளன. ஆனால் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்தாலும் கூட அரசு அலுவலகங்களை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கின. இதனிடையே லாக்டவுனால் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.
பல மாநிலங்களில் மதுகுடிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளுகிற சம்பவங்கள் நிகழ்ந்தும் வருகின்றன. இதனால் மதுபான கடைகளை திறப்பது குறித்து கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
அதேநேரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் முதலாவது கொரோனா நபர்
வடகிழக்கு மாநிலங்களில் பொதுவாக கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. அஸ்ஸாமில் மட்டும் சற்று அதிகமாக இருந்தது. நாகாலாந்தில் முதலாவதாக கொரோனா பாதிப்பு ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அஸ்ஸாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நாகாலாந்தின் திமாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications