இந்தியாவின் புகையிலை இல்லா கிராமமாக நாகாலாந்தின் ”கரிபிமா” தேர்வு
கோஹிமா: நாகாலாந்தில் உள்ள கரிபிமா என்ற கிராமம், நாட்டின் புகையிலை இல்லா முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, நாகாலாந்தில் உள்ள கரிபிமா கிராமத்தில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மாநில முதன்மை செயலாளர் பென்சிலோ தோங், புகையிலை இல்லாத நாட்டின் முதல் கிராமமாக கரிபிமா கிராமத்தை அறிவித்தார்.

மாணவர்களின் முயற்சி:
கிராம சபை, கிராம மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் அங்குள்ள மாணவர்கள் சங்கம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக கரிபிமா கிராமத்தில் முழுமையாக புகையிலை பொருட்கள் பயன்பாடு ஒழிக்கப்பட்டுள்ளன.

1000 ரூபாய் அபராதம்:
இந்த கிராமத்தில் புகையிலை அல்லது மது போன்ற போதைப் பொருட்களை யாராவது விற்றாலோ அல்லது யாராவது குடித்துவிட்டு வந்து அமைதியைக் குலைக்கும் விதமாக நடந்து கொண்டாலோ அவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும்.

புகையிலை இல்லா கிராமம்:
தெருக்களிலோ, பொது இடங்களிலோ மது, பீடி, பான், பாக்கு அல்லது புகை வராத புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும்.

அறவே ஒழிப்பு:
இத்தகைய நடைமுறைகளை தீவிரமாகப் பின்பற்றியதன் மூலம் இந்த கிராமத்தில் புகையிலைப் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமம், நாட்டின் முதல் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் அதிகம்:
புகையிலை பழக்கத்தால் தினமும் 2200 இந்தியர்கள் இறக்கிறார்கள். கேன்சர் நோயாளிகளில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். 90 சதவீத வாய் புற்றுநோய்க்கு புகையிலை பழக்கமே காரணமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications