காங்கிரஸ் ஆட்சியில் அமைத்த அமைச்சர்கள் குழுவை கலைத்தார் மோடி
மும்பை: காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுக்களை கலைத்து பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் அடங்கிய 9 உயர் அதிகார குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் உருவாக்கப்பட்டன. அமைச்சரவைக்கு ஏதாவது ஒரு விவகாரம் ஆலோசனைக்கு வரும் முன்பாக இந்த குழுக்கள் அதை பரிசீலனைக்கு உட்படுத்தும். இந்த முப்பது குழுக்களையும் மோடி இன்று ஒருசேர கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒரு முடிவை எடுக்க காலதாமதம் ஆவது, அமைச்சர்களை பொறுப்பில் இருந்து தப்பிக்கச் செய்வது போன்ற குறைபாடுகளை நீக்க இந்த குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது. இக்குழுக்களின் முன்பு நிலுவையிலுள்ள விவகாரங்களை இனிமேல் அமைச்சகங்களே நேரடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அடுத்த 100 நாட்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டு அளித்துள்ள மோடி தற்போது அமைச்சர்களுக்கான பணியை மேலும் அதிகரித்துள்ளார். இதன் மூலம் அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போதுமே துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குமாறு பிரதமர் பார்த்துக்கொண்டுள்ளார்.