தேர்தல் கமிஷனை நம்பாவிட்டால் எதிர்கட்சிகள் போட்டியிடுவது ஏன்? மோடி அட்டாக்
பனாஜி: ஐந்து மாநில தேர்தல் தேதிகளை நான்தான் முடிவு செய்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தல் கமிஷன் என்னும் நடுவர் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சிக்கு சவாலாக எதிர்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் பனாஜியில் நேற்று பாஜக தேர்தல் பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கு பதிலாக பட்ஜெட் முன்கூட்டி தாக்கல் செய்ய இருப்பது தொடர்பாக, பட்ஜெட் விதிமுறைகள் குறித்து எந்தவொரு எண்ணமும் இல்லாத எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன. இதன் மூலம் அந்த கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன.
பட்ஜெட் தேதிக்குள் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் பட்ஜெட்டை தயாரிப்பதை விட கடினமாக எதிர்க்கட்சியினர் தேர்தல் பணியாற்றுகின்றனர். அதுவே, அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கான அறிகுறி. அரசியல் குழப்பநிலையால் கோவாவின் வளர்ச்சி தடைபட்டது. பணமதிப்பிழப்பால் கோவாவில் சுற்றுலா பாதிக்கப்படவில்லை. கோவாவுக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு பாஜக உதவி உள்ளது.
கட்டமைப்பு, சமூக திட்டங்கள் போன்ற வற்றில் பெரிய மாநிலங்களுக்கே கோவா முன்மாதிரியாக இருக்கிறது. கோவாவில் என்ன நடக்கிறது என்பதை டெல்லியில் இருந்தே நான் பார்க்கிறேன் கோவாவை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாக்கு வெட்டிகள் எல்லாம் பிக்பாக்கெட் காரர்கள் போன்றவர்கள். பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆவதையொட்டி சில கட்சிகள் அவர்களாகவே வரைவறிக்கை தயாரிக்கிறார்கள். பஞ்சாப், கோவா மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி தான் தேர்தல் கமிஷனை நிர்ப்பந்தித்தார் என்று சில கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அம்பயரை நம்பாவிட்டால் எதற்காக களம் இறங்குகிறீர்கள். தேர்தல் கமிஷன் என்னும் அம்பயர் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.