"சொந்தக்காரர்களை வேலைக்கு சேர்த்தா அவ்வளவுதான்.." அமைச்சர்களுக்கு மோடி எச்சரிக்கை
டெல்லி: சொந்தக்காரர்களை யாரையாவது பக்கத்தில் வச்சிகிட்டா நல்லா இருக்காது.. இதுதான் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறப்பித்துள்ள உத்தரவு.
குஜராத் மாடல் அரசாட்சி நடத்துவேன் என்று வாக்களித்து பிரதமராகியுள்ள நரேந்திரமோடி, அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடங்கியுள்ளார். மத்திய அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை செயலாளர்களாகவோ அல்லது தனி உதவியாளர்களாகவோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று கறாராக கூறியுள்ளார் மோடி.
மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகம் இதுகுறித்த அறிவுறுத்தலை அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பியுள்ளது. மோடி பிரதமரானதும் முதலில் கையெழுத்திட்ட, கோப்புகளில் இதுபற்றிய உத்தரவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது பவன்குமார் பன்சால் ரயில்வே அமைச்சராக இருந்தார். அவர் தனது சகோதரியின் மருமகன் ராகுல் பண்டாரி என்பவரை தனி உதவியாளராக வைத்திருந்தார். தனது தனி செயலாளராக உறவுக்காரர் விஜய்சிங்லாவை நியமித்திருந்தார். ரயில்வே வேலைவாய்ப்புக்காக பணம் பெற்றுக்கொண்டு ஆள் எடுத்த சர்ச்சையில் விஜய்சிங்லா சிக்கியதை தொடர்ந்து பவன்குமார் பன்சால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
இதையெல்லாம் வைத்து ஊழலை கட்டுப்படுத்த உறவினர்களை பக்கத்தில் சேர்க்காதீர்கள் என்று மோடி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இதை எத்தனை அமைச்சர்கள் நடைமுறைப்படுத்துவார்கள், மோடிக்கு எதிராக அவர்கள் திரும்புவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.