மோடியை பற்றி வாய் தவறி 'அப்படி' கூறிவிட்டேன்: கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி
பெங்களூர்: நரேந்திர மோடி ஆளும் நாட்டில் தான் இருக்க மாட்டேன் என்று வாய் தவறி கூறிவிட்டதாக கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆட்சி செய்தால் நான் இந்தியாவில் வாழ மாட்டேன் என்று பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி(82) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு மோடியின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மிரட்டியதால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அனந்தமூர்த்தி கூறுகையில்,
வாய் தவறி
மோடி ஆட்சி செய்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று வாய் தவறி கூறிவிட்டேன். மோடியின் ஆட்சியில் வாழ விரும்பவில்லை என்று தான் கூற விரும்பினேன். இதை பொதுஅறிவு உள்ள யாராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு நான் தற்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம்.
டிக்கெட்
எனக்கு யாரும் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கவில்லை. அந்த செய்தி எப்படி வெளியானது என்று தெரியவில்லை. என்னை நாட்டை விட்டு வெளியேறுமாறு மட்டும் கூறினார்கள். தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆட்கள் என்று கூறி எனக்கு இமெயில் அனுப்பினார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
என் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்னை யாரும் நேரில் மிரட்டவில்லை போனில் தான் மிரட்டினார்கள். நான் கர்நாடகாவை விட்டு கூட வெளியேற மாட்டேன். இது என் இடம்.
இந்திரா காந்தி
நான் முன்பு இந்திரா காந்தி பற்றி கூட விமர்சித்துள்ளேன். ஆனால் அப்போது யாரும் என்னை மிரட்டவோ, தண்டிக்கவோ இல்லை. தற்போதும் கூட மோடி என்னை தண்டிக்கவில்லை. அவரது ரசிகர்கள் தான் மிரட்டுகிறார்கள்.
மோடி
என் விவகாரம் பற்றி மோடிக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். அவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர் தானே. அவரும் இளம் வயதில் இது போன்று செய்திருக்கலாம்.