மோடியைத் தீவிரவாதிகள் தாக்கக் கூடும்- பீகார் போலீஸை முன்பே எச்சரித்தை ஐபி
பாட்னா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தீவிரவாதிகள் அவருக்குக் குறி வைக்கக் கூடும் என்று பீகார் காவல்துறையை முன்கூட்டியே உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு 5 நாட்கள் முன்புதான் இந்த எச்சரிக்கையை மத்திய உளவுத்துறையான ஐபி, கடிதம் மூலம் பீகார் அரசுக்கு அனுப்பியுள்ளது.
பாட்னாவில் உள்ள ஐபி கிளையிலிருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகள் குழு குறி வைக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உளவுத்துறை இதுகுறித்து எச்சரிக்கைவில்லை என்று கூறியுள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் ஐபி மறுப்பு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 23ம் தேதி பீகார் ஐபி இணை இயக்குநர் விவேக் ஸ்ரீவத்சாவா இதுதொடர்பாக எழுதியிருந்த கடிதத்தில், இந்துக்களின் தலைவராக கருதப்படும் நரேந்திர மோடி, சில முஸ்லீம் அமைப்புகளால் குறி வைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவருக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால் நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு ஐபியிடமிருந்து எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று பீகார் போலீஸார் கூறுகின்றனர்.
ஆனால் பீகார் மாநிலத்தை மட்டுமல்லாமல் மோடி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஐபி விளக்கம் தெரிவித்துள்ளது.
பாட்னாவில் மோடி கூட்டம் நடந்த பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயமடைந்தனர். மொத்தம் 7 குண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீனே காரணம் என்று பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications