ஊழலை ஒழிக்க பணமற்ற பொருளாதாரம்.. பலே திட்டத்தோடு களமிறங்கியுள்ள மோடி அமைச்சரவை
டெல்லி: பணமற்ற பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் பல அதிரடி திட்டங்களோடு களமிறங்கியுள்ளது மோடி அமைச்சரவை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேடியோவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா, பணமற்ற வர்த்தக நாடாக மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். லஞ்சம், ஊழலை ஒழிக்க அனைத்து பரிமாற்றங்களும் வங்கி வழியாக நடப்பது அவசியம் என்றார்.
பேச்சோடு மட்டுமல்ல, ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான அமைச்சர்கள் குழு இதை வழிமுறைப்படுத்த திட்டமிட்டு ஒரு ஆலோசனை கூட்டத்தை சமீபத்தில் நடத்த முடித்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜேபி நட்டா, பிரகாஷ் ஜவடேக்கர், நரேந்திர சிங் தாமர், ராதா மோகன்சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கிராமப்புறங்களிலும் எப்படி பணமற்ற வர்த்தகத்தை நடத்துவது என்பது குறித்துதான் இதில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அனைத்தையும் பணமற்ற பரிவர்த்தனையாக்க முடியாது என்பதை அமைச்சரவை குழு ஒப்புக்கொண்டது. ஆனால் முடிந்த அளவுக்கு பணமற்ற சந்தையை உருவாக்க வேண்டியது ஊழலை தடுக்க அவசியம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக எஸ்பிஐ வங்கியின் 'பட்டி' போன்ற ஆப்கள், பேடிஎம் அல்லது மொபிக்விக் போன்ற தனியார் ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கப்படுத்துவது, அதை சாமானியர்களுக்கும் எட்டும்படி செய்வது ஆகியவற்றை அரசு மேற்கொள்ள உள்ளது.
பள்ளி, கல்லூரிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிலும் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்துவதை உறுதி செய்ய அரசு ஊக்கம் கொடுக்கப்போகிறது. கிராம மக்களுக்கு அங்கெல்லாம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை நகரச் செய்ய மத்திய அரசு முழு முயற்சி எடுத்துவருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.