நர்மதா அணையை 138 அடியாக உயர்த்த அனுமதி: 2.5 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம்
அகமதாபாத்: நர்மதா அணையின் உயரத்தை 121 அடியிலிருந்து 138 அடியாக உயர்த்த அணை கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தர் சரோவர் அணையின் உயரத்தை உயர்த்தும் திட்டத்திற்கு மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சோவ் அந்தோலன் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அணையின் உயரத்தை 121 அடியிலிருந்து 138 அடியாக உயர்த்துவதன் மூலம், 2.5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ள இந்த அமைப்பினர், அணையை உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வசிப்பிடங்கள், விளைநிலங்கள், எண்ணற்ற இயற்கை வளங்கள் நீரிழ் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையின் உயரத்தை 17 அடி உயர்த்த அனுமதி அளித்தது அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரா? அல்லது குஜராத் மாநில முதல்வராக மட்டுமே இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள நர்மதா பச்சோவ் அமைப்பினர், அணையினால் இடம்பெயர்வுக்கு ஆளான மக்களுக்கு உரிய இழப்பீடோ, வேலைவாய்ப்போ எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற பெரிய திட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற சர்வதேச உடன்படிக்கைகள் ஆற்றில் விடப்பட்டுவிட்டன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.