'கொடநாடு' கேஸ் பாணியில் 'உன்னாவ்' பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள்
உன்னாவ்: தமிழகத்தின் கொடாநாடு வழக்கில் நிகழ்ந்த மர்ம மரணங்களைப் போலவே உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ மீதான பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியானார்.

மற்றொரு குற்றவாளி சயான், தமது குடும்பத்துடன் காரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். இதில் சயான் மனைவி விஷ்ணுபிரியா, மகள் நீத்து பலியாகினர். பின்னர் கொடநாடு எஸ்டேட் சிசிடிவி பராமரிப்பாளர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இச்சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதேபாணியில் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ மீது பலாத்கார புகார் தெரிவித்தவர்கள் குடும்பம் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி மரணித்து வருவது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உன்னாவில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தற்போது சிறையில் உள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சென்காரால் தமது சகோதரி பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது சகோதர்கள் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இவ்வழக்கில் போலீசார் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க்வில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
2018-ல் அப்பெண்ணின் குடும்பத்தினரை எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கினர். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறைக்குப் போன சில நாட்களிலேயே மரணமடைந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் தந்தையின் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக குறிப்ப்பிட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் பெண்ணின் தந்தை தாக்கப்பட்டு இறந்ததற்காக நேரடி சாட்சி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது எம்.எல்.ஏ. மீது குற்றம்சாட்டிய பெண் மற்றும் அவரது உறவினர்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றனர்.
இதில் பெண்ணின் தாயார் மற்றும் உறவினர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் ஆகியோர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications