ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அடம் பிடித்த பரூக் அப்துல்லா! இறங்கி ஆடிய ராகுல்! உருவானது வலுவான கூட்டணி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் "இந்தியா" கூட்டணியை உயிர்ப்பித்திருக்கிறார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என பேசி வந்த தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனத் தலைவர் பரூக் அப்துல்லாவை கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் ராகுல். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியில் சிபிஎம் கட்சியும் இணைவதால் வலிமையான "இந்தியா" கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிற தேர்தல். அதுவும் யூனியன் பிரதேசமாக கூறு போடப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தல் இது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் மற்றும் சிறிய மாநில கட்சிகள் களத்தில் உள்ளன. காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருப்பவை. இதனால் காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணி என்னவாகும்? என்கிற கேள்வி எழுந்தது.
அதேநேரத்தில் எந்த கட்சியுடனுமே கூட்டணி கிடையவே கிடையாது என தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அடம் பிடித்தார். ஆனால் அவரது மகன் உமர் அப்துல்லா, காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் நேற்று முதல் முகாமிட்டுள்ளனர். இன்று ஶ்ரீநகரில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை ராகுல் காந்தி, கார்கே சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புகளில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் "இந்தியா" கூட்டணி உயிர் பெறுவது உறுதியானது.
ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து செயல்படுவோம். ஏற்கனவே சிபிஎம் எங்களுடன் இணைந்து நிற்கிறது. ஆகையால் நாங்கள் இணைந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றுவோம். எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பின்னர் இணைந்து செயல்படுவது தொடர்பாகவே ஆலோசிக்கிறோம். அதன் பின்னரே பொதுசெயல் திட்டம் பற்றி பேச இருக்கிறோம். முதலில் தேர்தலை சந்திப்போம். ஏற்கனவே நாங்கள் இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications