வக்பு: தமிழக அரசிடம் இருந்து காஷ்மீர் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி பாடம் கற்க வேண்டும்- மெகபூபா முப்தி
டெல்லி: வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; வக்பு சட்டத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசிடம் இருந்து ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி பாடம் கற்க வேண்டும் என்று அம்மாநில மூத்த அரசியல் தலைவரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒப்புதல் அளித்தார். இதனால் வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. ஆனால் இதற்கு சட்டசபையில் சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வக்பு சட்டத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது வேதனைக்குரியதாகும். ஜம்மு காஷ்மீர் மக்கள் வலிமையான ஆதரவு தீர்ப்பை வழங்கிய போதும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜகவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, தமிழ்நாடு அரசிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுதான் வக்பு சட்ட திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு காஷ்மீர் அரசு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிப்பது. விவாதிக்க கூட மறுப்பது என்பது துணிச்சலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications