மேகி நூடுல்ஸ் சாப்பிட லாயக்கில்லை: கண்டுபிடித்த டெல்லி, தற்காலிக தடை விதித்த கேரளா
டெல்லி: டெல்லி அரசு பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த மேகி நூடுல்ஸை சோதனை செய்து பார்த்ததில் அது சாப்பிட தகுதியற்றது என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கேரள அரசு மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நெஸ்ட்லே நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசு 13 இடங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகிளை சேகரித்து ஆய்வகத்தில் சோதனை நடத்தியது.

மேகி
டெல்லி அரசு செய்த சோதனையில் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது தெரிய வந்துள்ளது. சேகரிக்கப்பட்ட 13 மாதிரிகளில் 10ல் அதிக அளவு ஈயம் இருப்பதை டெல்லி அரசு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் சாப்பிட தகுதியற்றது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கேரளா
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மேகி நூடுல்ஸின் விற்பனைக்கு கேரள மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு நடத்தும் 1,200 கடைகளில் மேகி நூடுல்ஸை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
ஹரியானா, ஒடிஷா, உத்தரகண்ட், குஜராத், பீகார், பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் தமிழகம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை அரசு ஆய்வகங்களுக்கு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நெஸ்ட்லே
நெஸ்ட்லே நிறுவனமோ மேகி நூடுல்ஸை தங்களுடையது மற்றும் வெளி ஆய்வகங்களில் சோதனை செய்தததாகவும் அதில் அளவுக்கு அதிகமாக ஈயமோ, மோனோசோடியம் க்ளூட்டமேட்டோ இல்லை என்று தெரிவித்துள்ளது.

அரசு
மேகி விவகாரம் குறித்து நெஸ்ட்லே நிறுவன அதிகாரிகளுக்கு டெல்லி அரசு சம்மன் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிற பிராண்ட் நூடுல்ஸுகளையும் சோதனை நடத்த உணவுத் துறை தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications