சத்தீஷ்கர் தேர்தல்: ஓட்டுப் போட்டால் விரல்களைத் துண்டிப்போம்: கிராம மக்களை மிரட்டும் நக்சலைட்டுகள்
டெல்லி: அடுத்தமாதம் நடைபெற உள்ள சத்தீஷ்கர் தேர்தலில் யாரும் ஓட்டு போடச் செல்லக் கூடாது, அப்படியும் யாராவது திருட்டுத்தனமாக ஓட்டுப்போட்டால், ஓட்டு போட்ட மை அவர்களது விரல்களில் இருந்தால் அந்த விரல்கள் உடனடியாக துண்டிக்கப் படும் என அதிரடி மிரட்டல் விடுத்துள்ளனர் நக்சலைட்டுகள்.
சத்தீஷ்கார் மாநிலம், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாநிலம். கடந்த காலங்களில், தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன் நக்சலைட்டுகள் நிறுத்திக்கொள்வார்கள். ஆனால், இம்முறை கடும் விளைவுகள் ஏற்படும், விரல்களைத் துண்டித்து விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சட்டசபைத் தேர்தல்...
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 11 மற்றும் 19-ந் தேதி என இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் அங்கு நடைபெற்று வருகின்றது.

சுவரொட்டிகள்...
நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் இருந்து ‘ஓட்டு போடக்கூடாது' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள் நக்சலைட்டுகள்.

எச்சரிக்கை....
ஓட்டுப்பதிவு நாளன்று வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். மீறி ஓட்டு போட்டால், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

விரல்கள் பத்திரம்...
‘யாருடைய விரலிலாவது ஓட்டு போட்ட மை காணப்பட்டால், அவர்களின் விரல்களை துண்டித்து விடுவோம்' என மிரட்டியும் வருகிறார்கள்.

கூடுதல் படை குவிப்பு...
இந்த மிரட்டலை கருத்தில் கொண்டு, சத்தீஷ்கர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 40ஆயிரம் துணை ராணுவப்படையினர் அனுப்பி வைத்துள்ளது. அங்கு ஏற்கனவே, 27 ஆயிரம் துணை ராணுவப்படையினர், நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications