மாணவர்களே.. இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வாம்.. மத்திய அரசு அதிரடி!
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நீட் தேர்வை கைவிட மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துவிட்டது.
கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 13 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இதில் வெறும் 60, 000 பேர் மட்டுமே இந்த தேர்வில் தகுதி பெற்றனர். இதனால் மருத்துவ படிப்பில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
ஆண்டுக்கு 2 முறை நீட்
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட், ஜேஇஇ, யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை என்டிஏ எனும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றார்.
நீட் - பிப்ரவரி, மே
மேலும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிறந்த மதிப்பெண்
இரண்டு முறையும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் இதில் பெறப்படும் சிறந்த மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆன்லைன் தேர்வு அல்ல
எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி தேர்வாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
சிரமம் இருக்காது
தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
கூடுதல் வாய்ப்பு
நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுவதால் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.