விடிந்தால் தேர்வு.. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் மாணவி தூக்கிட்டு தற்கொலை- ஒரே ஆண்டில் 14-வது மரணம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்களில் இது 14-வது தற்கொலை சம்பவமாகும். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள், இன்றைய நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் விவரங்கள் எதனையும் போலீசார் வெளியிடவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவிலான நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் நீட் தேர்வுக்காக மாணவிகள் இந்த பயிற்சி மையங்களில் தங்கி தயாராகி வருகின்றனர்.
அதேநேரத்தில் இந்த பயிற்சி மையங்களின் எதேச்சதிகாரம் மற்றும் மன உளைச்சல் காரணமாக ராஜஸ்தான் கோட்டாவில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்களில் இதுவரை 14 பேர், கோட்டாவில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications