ராகுல் 'இமேஜ்' பில்டப்புக்காக ரூ500 கோடியில் களம் இறக்கப்படும் ஜப்பான் நிறுவனம்!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கான விளம்பரங்கள், தேர்தல் வியூகங்கள் வகுக்க, இமேஜ் பில்டபுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ500 கோடி செலவில் களம் இறக்கப்படுகிறதாம்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டு பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். ஆனால் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க போகும் ராகுல் காந்தி இன்னும் தேர்தல் பணியை தொடங்கவில்லை.

ஒப்பற்ற தலைவராக்க வியூகம்
நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ராகுல் மீதான இந்த விமர்சனத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றவும் ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
டென்ட்சு இந்தியாவுடன் ஒப்பந்தம்
இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்தியா (Dentsu India) என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூ500 கோடி
ராகுலின் இமேஜ் பில்டபுக்காக இந்நிறுவனத்துடன் ரூ. 500 கோடிக்கு ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது
என்ன செய்யும் டென்ட்சு இந்தியா?
இந் நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்குமாம்.
புதிய கோஷம்
"சாமானியனுக்கும் அதிகாரம்' என்பதை தேர்தல் முழக்கமாக அறிவிக்கவும் இந்த நிறுவனம் காங்கிரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ராகுலுக்காக சர்வே
மேலும் ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும் வகையில் இருக்க, இந்த நிறுவனம் சர்வேயும் நடத்தி வருகிறது. அனேகமாக பிப்ரவரி முதல் ராகுல்காந்தியின் புதிய கோணத்தை எதிர் பார்க்கலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications