பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக சுமித்ரா மகாஜன் அல்லது திரெளபதி முர்மு?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரும் 15-ந் தேதியன்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அல்லது ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் சுஷ்மா ஸ்வராஜ், ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத் என ஏராளமான பெயர்கள் அடிபடுகின்றன. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் முனைப்பு காட்டப்படுகிறது.

வரும் 15-ல் அறிவிப்பு
இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அல்லது ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரெளபதி முர்மு ஆகியோரில் ஒருவர்தான் வேட்பாளராக இருப்பர் என்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.

சுமித்ரா மகாஜன்
சுமித்ரா மகாஜன் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்; மத்திய பிரதேசத்தில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வானவர்; அதனால் அவரை சிவசேனா ஆதரிக்கும் என்றே தெரிகிறது. டெல்லி பாஜக மேலிடமும் அவரது வெளிநாட்டு பயணங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

திரெளபதி முர்மு
அதேபோல் திரெளபதி முர்மு, ஒடிஷா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வென்றால் நாட்டின் முதலாவது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவராவார்.

வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி பதவிக்கு மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications