அதிரடி.. காஷ்மீரின் 7 மாவட்டங்களை சுற்றிய என்ஐஏ அதிகாரிகள்.. 15 இடங்களில் ‛ரெய்டு’.. பரபர பின்னணி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் தொடர்புடைய வழக்கில் ஸ்ரீநகர் உட்பட 7 மாவட்டங்களில் 15 இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தி வருகிறது. ஜி20 மாநாட்டின் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களிலும் ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இந்த மாநாட்டு கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எதிர்வரும் 22 முதல் 24ம் தேதி வரை தால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை 'பொறுப்பற்ற தன்மை' என பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவிலான நிகழ்ச்சி ஒன்றை இங்கு நடத்துவது பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாகவும், ஆதரவளித்ததாகவும் இரண்டு வழக்குகளின் கீழ் இன்று என்ஐஏ ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் ரெய்டு நடத்தி வருகிறது. இன்றும் இந்த ரெய்டு தொடர்ந்து வருகிறது. ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச் மற்றும் குப்வாரா என 7 மாவட்டங்களில் 15க்கும் அதிகமான இடங்களில் இன்று ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜி20 மாநாட்டின் கூட்டத்தை சிதைக்கும் நோக்கத்துடன் ஏதேனும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளார்களா என்பதையும் என்ஐஏ கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications