ஹை அலர்ட்டில் கேரளா.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. நிபா வைரஸ் உறுதி.! இதற்கு வேக்சினே இல்லையாம்
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் இப்போது திடீரெனப் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், அந்த பெண் வசித்த பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வேலைக்காக அதிகப் பேர் வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள். இதனாலேயே புதிய நோய்ப் பாதிப்புகள் ஏற்படும்போது கேரளாவிலேயே அவை முதலில் ஏற்படுகிறது. உலகைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் முதல் தொற்று கூட இந்தியாவில் கேரளாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளா
இதற்கிடையே கேரள மாநிலம் மலப்புரத்தில் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 வயதான அந்தப் பெண் வலஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவருக்குக் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது.
அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நிபா வைரஸ்
அந்தப் பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு இருப்பவர்களிடம் சுகாதாரத் துறையினர் சோதனை செய்துள்ளனர். நல்வாய்ப்பாக அவர்களுக்கு எந்தவொரு நிபா வைரஸ் அறிகுறியும் இல்லை. இருப்பினும், தீவிரச் சோதனைக்காக அந்தப் பெண் வசித்து வந்த பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டில் இருந்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நிபா வைரஸ் குறித்த தகவல் கிடைத்தவுடன் மலப்புரம் செல்கிறார். மேலும், நிபா வைரஸ் தொற்று தொடர்பாக அவர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்துகிறார். அந்தப் பகுதியில் வேறு யாருக்கும் நிபா வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்யச் சோதனையும் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
கேரளாவும் நிபா வைரஸும்!
கேரளாவில் முதலில் கடந்த 2018இல் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019, 2021, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளிலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதேபோல கடந்த ஆண்டு கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த இரண்டுமே இதே மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் அறிகுறிகள்
நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டும் போது காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். மயக்கம், தூக்கச் சிக்கல், நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படும். மேலும், சிலர் நேரங்களில் கடுமையான சுவாசப் பிரச்சனைகள், நிமோனியா ஏற்பட்டு வலிப்பு, கோமா உயிரிழப்பு கூட ஏற்படலாம். நமது உடலில் நிபா வைரஸ் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
இப்போது நிபா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு வேக்சினும் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறையும் இல்லை. இதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கு மருத்துவர்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தருவார்கள். நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவோரில் 40- 75% பேர் உயிரிழக்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications